மண்டல, மகர விளக்கு சீசனில் வார நாட்களில் ஆயிரம் பேரும், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பேரும் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 24 மணி நேரத்துக்குள் எடுத்த கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியதாவது: மண்டல சீசனுக்கு நவ.,15 மாலை நடை திறக்கப்படுகிறது. நவ.,16 முதல் தரிசனத்திற்கு அனுமதி வழக்கப்படும். டிச.,26 மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு நடை அடைக்கப்பட்டு டிச.,30 மாலை நடை திறக்கும். ஜன.,20 வரை நடை திறந்திருக்கும். மகரவிளக்கு ஜன.14 நடைபெறும். தரிசனத்திற்கு இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இவர்கள் 24 மணி நேரத்துக்குள் எடுத்த கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும். வார நாட்களில் ஆயிரம், சனி, ஞாயிறு இரண்டாயிரம், மண்டலபூஜை, மகரவிளக்கு நாட்களில் ஐந்தாயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை பாதைகளின் பல்வேறு இடங்களில் கோவிட்-19 பரிசோதனை மையம் அமைக்கப்படும். பம்பையில் பக்தர்கள் குளிக்க அனுமதி கிடையாது. சுவாமி ஐயப்பன் ரோடு வழியாக மட்டுமே பக்தர்கள் ஏறவும், இறங்கவும் அனுமதிக்கப்படுவார்கள். பம்பை, சன்னதானத்தில் பக்தர்கள் தங்க முடியாது. பக்தர்கள் கொண்டு வரும் நெய் கவுண்டர்களில் பெறப்பட்டு ஊழியர்கள் அபிஷேகத்துக்கு கொண்டு செல்லப்படும். நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வரும் வாகனங்கள் பம்பை சென்று இறக்கிவிட்டு நிலக்கல் வந்து பார்க்கிங் செய்ய வேண்டும். மலைபாதையில் அவசர சிகிச்சை மையங்கள் இயங்கும். பணி நிமித்தமாக வருபவர்களும் கண்டிப்பாக கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழுடன் தான் வரவேண்டும். பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post