திருமலை திருப்பதி கோவிலின் வைப்பு நிதி அரசின் பத்திரங்களில் முதலீடு செய்ய உள்ளதாக எழுந்த தகவலை தேவஸ்தானம் மறுத்துள்ளது.
உலகின் பணக்கார தெய்வமான திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இக்கோவிலுக்கு பக்தர்கள் அளித்து வரும் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கைகளை பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. அதில் கிடைக்கும் வட்டி தொகை மூலம் அன்னதான உணவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறு வாழ்வு அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.12ஆயிரம்கோடி வரையிலான நிதியை வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரையில் வரும் டிசம்பர் மாதத்தில் முதிர்வடைய உள்ளது. தற்போதைய நிலையில் வங்கி வட்டி விகிதம்6-7 சதவீதத்தில் இருந்த 3-4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவில் அறக்கட்டளை வாரியத்தின் கணக்கு பிரிவு வங்கி வட்டி விகிதம் குறைந்து வரும் நேரத்தில் அதிக வட்டி விகிதத்தை பெறுவதறகாக மத்திய, மாநில அரசின் பத்திரங்களில் முதலீடு செய்ய கொள்கை அளவில் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கோவில் பணத்தை மாநில அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான முடிவை வாரியம் திரும்ப பெற வேண்டும் .இதை செய்ய தவறினால் கோர்ட்டை அணுகவேண்டி வரும் என என பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ்ரெட்டி தெரிவித்துள்ளார். முக்கிய எதிர்கட்சியான தெலுங்கு தேச கட்சியும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதனிடையே கோவில்நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: வட்டி விகிதங்கள் குறைந்ததை அடுத்து அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வது என்ற விருப்பத்தை ஆய்வு செய்ய வாரியம் விரும்பியது. தற்போது வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் இப்போது அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய தேவையில்லை என அறக்கட்டளை வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இது குறித்த விளக்கத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்திலும் பதிவறே்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
Discussion about this post