சுகாதாரத் துறை எதிர்ப்பால், சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிகிறது.கொரோனா பரவலால், கடந்த மார்ச் முதல், சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் கார்த்திகை, 1ம் தேதியான நவ., 16 முதல் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் எனவும், அதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னோடியாக, ஐப்பசி மாத பூஜையின் போது, குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. ஐப்பசி மாத பூஜைகள் அக்., 16ல் தொடங்க உள்ளன.ஆனால், பக்தர்களை அனுமதிக்க, சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கேரளாவில் தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால், பக்தர்களை அனுமதித்தால் அது மேலும் பரவலை அதிகரிக்கும் என, அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால், ஐப்பசி மாதத்திலும் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது:ஐப்பசி மாத பூஜையில், பக்தர்களை அனுமதிப்பதன் மூலம் மண்டல, மகரவிளக்கு காலத்தில், பக்தர்களை அனுமதிக்க உதவியாக இருக்கும் என கருதப்பட்டது. சுகாதாரத் துறை எதிர்ப்பால், எங்கள் முடிவை வாபஸ் பெற்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Discussion about this post