உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி வரும் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ஒரு நாளைக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர பூஜை காலங்களில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருடம் தோறும் வருவார்கள். ஆனால், கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். நிலக்கல்லில் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் இவ்வாறு திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post