பல ஆண்டுகளாக நீடித்த அயோத்தி நிலப்பிரச்சினை, கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோவில் கட்டும் பணி துவங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 500 ஆண்டுகளாக ராமர் கோவில் போராட்டத்தில் கலந்துகொண்ட கரசேவகர்களின் தியாகத்தை அங்கீகரிக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதற்காக ராமர் கோவில் வளாகத்தில் கரசேவகர்களின் போராட்ட வரலாற்றை பதிவு செய்யும் வகையில் ஒரு நினைவகம் அமைக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், ‘ராம ஜென்ம பூமி வளாகத்தில் அமையும் அனைத்திலும் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இக்கோவிலுக்காக கடந்த 500 ஆண்டுகளாக போராடிய கரவேகர்கள் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் நினைவகம் அமைக்க ஆலோசித்து வருகிறோம். ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளது’ என்றனர்.
இதன்மூலம், ராமர் கோவிலுக்கு வருபவர்கள் இடையே விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி.,) புகழை பரப்பும் நோக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நினைவகத்தில் வி.எச்.பி., தலைவர் அசோக் சிங்கால், வி.எச்.பி., அறக்கட்டளை தலைவர் ஸ்ரீராமச்சந்திர பரமஹம்ஸ் ஆகியோரின் வரலாறும் இடம்பெற உள்ளது. கரசேவை செய்து உயிர்நீத்த கோத்தாரி சகோதரர்கள் உள்ளிட்டோரின் படங்களும் அதில் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post