அயோத்தியல் ராமர் கோவிலுக்கான பூமி பூஜைக்கு பின், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு உ.பி.,யின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ்சிங் யாதவ் தலைமை வகித்தார்.
இதில், 2022ல் வரவிருக்கும் உ.பி., சட்டப்பேரவை தேர்தலில் ராமர் கோவிலின் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து, இந்துக்கள் கடவுள் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரை முன்வைத்து அரசியல் லாபம் ஈட்ட சமாஜ்வாதி திட்டமிட்டது. இதன் முதல்கட்டமாகப் பரசுராமர் சிலையை உ.பி.,யில் உள்ள 75 மாவட்டங்களிலும் நிறுவ முடிவு செய்துள்ளனர். தலைநகரான லக்னோவில் வைக்கப்படுவது 180 அடி உயரத்தில் உ.பி.,யிலேயே உயரமான சிலையாக அமையவுள்ளது.
கைகளில் கோடாரியை வைத்தபடி ஆஜானுபாகுவான உடல் தோற்றத்தில் பரசுராமர் சிலையை சமாஜ்வாதி அமைக்கவுள்ளது. சிலைகளை உ.பி.,யின் பரசுராம் சேத்னா பீடம் அறக்கட்டளையுடன் இணைந்து அமைக்கவும் சமாஜ்வாதி திட்டமிடுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘உ.பி.,யில் பிராமண சமூக வாக்குகள் 12 சதவிகிதம் உள்ளன. பல ஆண்டுகளாகக் காங்கிரசிடம் இருந்த பிராமண சமூக வாக்குகள் ராமர் கோவில் வாக்குறுதியால் பா.ஜ.க., பக்கம் சாயத் துவங்கின. தலீத் சமூகத் தலைவரான மாயாவதி, பிராமணர்களையும் தாக்கூர் சமூகத்தினருடன் ஒன்றிணைத்து ஒரு சமூகப் புரட்சிக்கு முயன்றார். இதனால், அவரது பகுஜன் சமாஜ் கட்சி, 2007 தேர்தலில் தனிமெஜாரிட்டியில் ஆட்சி அமைத்தது.
2014 மக்களவைக்கு பிரதமராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டு வீசிய அலையால் மீண்டும் பா.ஜ., வசம் பிராமணர் வாக்குகள் சென்றன. இது, ராமர் கோவில் பூமி பூஜையால் அக்கட்சிக்கு வரும் தேர்தலிலும் வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது. இதை தடுத்து பிராமண சமூகத்தினரை தம் பக்கம் இழுக்க சமாஜ்வாதி கட்சி முயல்கிறது. இதேபோல், பிராமண வாக்குகளை இழுக்க, பகுஜன் சமாஜ் கட்சியில் இருதினங்களுக்கு முன் முக்கிய நிர்வாகிகளாக பிராமண சமூகத்தினர் பலரும் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது’ .
Discussion about this post