கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தினமும் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னர் மாளிகையில் அமர்நாத் ஆலய வாரிய கூட்டம் கவர்னர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டிருப்பதாவது:
தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டு உள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக உள்ள இக்காலகட்டங்களில் யாத்ரீகர்களின் பாதுகாப்பே முக்கியமானது. யாத்திரை பயணப்படும் பகுதிகளிலும் கொரோனா பரவ வாய்புள்ளைதை கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பூஜைகள் ஆன் லைனில் ஒளிபரப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. .