திருமலையில் ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்ய அனுமதி கோரி ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவலால் மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து திருமலை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின் மத்திய – மாநில அரசுகள் அனுமதியுடன் கடந்த மாதம் 11ம் தேதி தரிசனம் துவங்கியது. தரிசனம் துவக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் தினமும் 6 ௦௦௦ பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பின் பக்தர்கள் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.
திருமலையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்த பின் கொரோனா தொற்று பரவ துவங்கியது. திருப்பதியிலும் நோய் தொற்று அதிகரித்தது. தேவஸ்தான ஊழியர்கள் அர்ச்சகர்கள் என நேற்று வரை 158 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருமலை ஜீயர்களான பெரிய ஜீயர் சடகோப ராமானுஜர் சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜர் இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. தற்போது சாதுர்மாசிய விரதம் அனுசரிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு மடத்திலேயே தனிமை அறை ஏற்படுத்தி தர வேண்டும் என தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவர்களுக்கு தனிமை முகாம் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையெனில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர்களை அனுமதிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தற்போது தேவையான எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் உள்ள போதிலும் பக்தர்கள் வர தயங்குகின்றனர். தினசரி 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டாலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 6 ௦௦௦த்துக்கும் குறைவாகவே உள்ளது. வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநில அரசுக்கு திருமலை கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் முனிராமையா எழுதியுள்ள கடிதம்:திருமலையில் ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ஒரு மணி நேரத்திற்கு 250 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; பிரசாதங்கள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்.
தேவஸ்தான ஊழியர்களுக்கு ஒரு வார சுழற்சி முறையில் தங்கும் வசதியுடன் பணி வழங்க வேண்டும். தனியார் விடுதிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள பக்தர்களை திருமலைக்கு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.