மும்பையில் விநாயகர்சிலை வைப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என பிஹரன் மும்பை மாநகராட்சி( பிஎம்சி) அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. மும்பையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை இந்தாண்டு கட்டுப்பாடுகளோடு கொண்டாட பிஹரன் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அவை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:விநாயகர்சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் சிறியதும், பெரியதுமான சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணோத்ஸவ் மண்டலங்கள் உள்ளன. இவைகளில் இருந்து விநாயகர் சிலை வைப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பணியை மேற்கொண்டுள்ளது.
இதற்கான பணி நேற்று முன்தினம் (10 தேதி ) முதல் துவங்கப்பட்டுள்ளது. வரும் ஆக., மாதம் 19 ம் தேதி வரையில் விண்ணபங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக அமைக்கப்படும் சிலைகள் இந்தாண்டு 4 அடிக்கு மேல் இருக்க கூடாது.சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பந்தல்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தப்படுத்த வேண்டும். சிலையை வணங்க வருபவர்களுக்கு சானிடைசர்கள் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சிலைகள் வைக்கப்படும் இடத்தின் அருகே தற்காலிகமாக பூக்கள் விற்பனை கடை அமைக்கப்படும். இந்தாண்டு தற்காலிக பூக்கள் கடைக்கு அனுமதி கிடையாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் கட்டுபாட்டு நிபந்தனைகளை மீறுவோர் மீது தொற்று நோயகள் சட்டம் 1897. தேசிய பேரிடர் தடுப்புச்சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளது.
Discussion about this post