உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஒழியவும், நாட்டின் பாதுகாப்பிற்காக ஏழுமலையானிடம் வேண்டுதல் நடத்தியதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார்.
ஏழுமலையானை தரிசிக்க நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு தன் குடும்பத்துடன் திருமலையை அடைந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.முதலில், அதிகாரிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்கிய பின் மலர்செண்டு அளித்தனர். இரவு திருமலையில் தங்கிய முதல்வர் குடும்பத்தினர் நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தனர். தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், திருவுருப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்டு கோவிலை விட்டுவெளியில் வந்த அவர் நாதநீராஜன மண்டபத்தில் நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தில் குடும்ப சமேதமாக பங்கேற்றார்.
பின்பு அவர் கூறியதாவது, ‘நாடு மிக முக்கியமான இரு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. முதலில் கட்டுக்கடங்காமல் பெருகி வரும் கொரோனா தொற்று. இரண்டாவது எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல்.இவைகளிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காத்தருள வேண்டும் என்று ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தேன்.சுந்தர காண்ட பாராய ணம் பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியபடுத்தும். அதனால், அதில் கலந்து கொண்டது மனதிற்கு நிறைவாக உள்ளது’ என்று கூறினார்.
பின்னர் அகண்டம் அருகில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்பித்தார். ஜபாலி சென்று ஆஞ்சநேயரை குடும்பத்துடன் வழிபட்டார். பின்பு திருச்சானுார்சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து தாயாரின்பிரசாதங்களை பெற்றுக் கொண்டு அவர் மத்திய பிரதேசம் புறப்பட்டார்.
கொரோனாவிற்கான பொது முடக்கத்திற்கு பின் வெளி மாநிலத்திலிருந்து ஏழுமலையானை தரிசிக்க வந்த முதல் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Discussion about this post