திருப்பதியில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி, கோவில்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையொட்டி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, சோதனை முறையில் 2 நாட்கள் தேவஸ்தான பணியாளர்களும், நாளை உள்ளூர் பக்தர்களும் அனுமதிக்கப்படுவர்.
தொடர்ந்து, ஜூன் 11 முதல் ஆன்லைன் மூலமாக தரிசனத்துக்கு முன்பதிவு செய்த 3 ஆயிரம் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான கவுண்டர்கள் மூலமாக முன்பதிவு செய்த 3 ஆயிரம் பக்தர்கள் என மொத்தமாக 6 ஆயிரம் பேர் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில் சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில், சுவாமி தரிசனத்திற்கு 1 மணி நேரத்தில் 500 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சோதனை முறையில் அனுப்பப்பட்டதன் மூலம் நேற்று 2 மணி நேரத்தில் 1200 பக்தர்கள் வரை சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
Discussion about this post