புதுடெல்லி,
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது.
மாற்றுவது எப்படி?
இந்தியா முழுவதும் நேற்று இரவு திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவைகளை நாளை (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 30-ந் தேதிக்குள் தங்களது வங்கிகள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யலாம்.
அதேபோல ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளவும் முடியும். 24-ந் தேதி வரை ஒருவர் ஒருசமயத்தில் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும்.
டிசம்பர் 30-ந் தேதிக்குள் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாதவர்கள் ரிசர்வ் வங்கியில் ஒரு பிரகடனம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அதற்கு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் குறித்து இந்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியா நேர்மையான, ஊழலற்ற நாடாக விளங்குவதற்காக அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி 10-ந் தேதி (நாளை) முதல் இவைகளை வெளியிடுகிறது. இந்த நடவடிக்கை நாட்டின் நிதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு உதவும்.
உங்களை வேறு யாரும் கள்ளத்தனமான பணத்தை மாற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள். இரவுக்கு பின்னர் ஒருவர் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவது அவர்களது பொறுப்பு தான். புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டை படமும், புதிய 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் படமும் பொறிக்கப்பட்டு இருக்கும். கண் பார்வையற்றவர்களும் இந்த நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் அடையாள குறியீடுகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாற்றங்களின் மூலம் இந்தியாவில் 1,000 ரூபாய் நோட்டுகள் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post