ஆடி அமாவாசையில், உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் இன்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா சிவன் விஷ்ணு அருள்பாலித்தனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி மாதம் துவக்கம் முதல், சூரியன் தெற்கு நோக்கி செல்லும், தட்சிணா யன காலத்தில், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சி படிப்படியாக அதிகரிக்கும். பருவ மழைகள் பெய்து, நீர் நிலைகளில் நீர் வளம் பெருகும் காலத்தில், ஆடிப்பட்டம் சாகு படியை துவக்கும் விவசாயிகள், ஆடி அமாவாசை அன்று, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர். பயிர் செழிக்கவும்,கால்நடைச் செல்வங்கள் பெருகவும், ஆடிப்பட்ட சாகுபடிக் கான விதைகளை கொண்டு வந்து, வழிபட்டு செல்வதை பாரம்பரியமாக கடை பிடித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக, ஒரே இடத்தில், அதிகளவில் மக்கள் கூடுவதால், தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால், மக்கள் நலன் கருதி, இன்று ஆடி அமாவாசை நாளில், பொதுமக்கள், கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆடி அமாவாசையையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் இன்றி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.